Wednesday, June 12, 2013

கம்பம் பள்ளத்தாக்கும் கண்ணகி கோவில் பயணமும்.....

என்னுடைய முதல் பதிவு மிக நீண்ட நாட்களாக தள்ளி தள்ளி போய்கொண்டிருந்தது எழுதப்படுவதற்கு , ஏனெனில் இந்த பயண கட்டுரையை தான் எழுத வேண்டும் என்று விரும்பியதே காரணம் .

 பாண்டிய மன்னன் உண்மையை அறியாமல் கோவலனை கொன்றுவிட்டபின் அவனுடன் வாதம் புரிந்து உண்மையை எடுத்துரைத்தாள் கண்ணகி . பின்பு மதுரையில் உள்ள சான்றோர், குழந்தைகள் , மிருகங்கள் ஆகியவற்றை தவிர்த்து அனைத்தையும் எரித்து சாம்பலாகும்படி சாபம் விட்டாள் .பின் மதுரையை விட்டு வெளியேறி வைகை ஆற்றின் தென்கரை வழியாக நடந்து சென்று பதினாலு நாட்கள் கடந்து சேரநாட்டு எல்லையான விண்ணோத்திப் பாறை வந்தடைகிறாள்.


 இங்கு வசித்து வந்த குன்றக் குறவர்கள் என்று அழைக்கப்பட்ட பளியர்கள் ஆடிய குன்றக் குறவை நடனத்தினைப் பார்த்து அவளது கோபம் குறைகிறது. அவர்களிடம் தன வாழ்க்கையையும் தனக்கு நேர்ந்த துன்பத்தையும் சொல்லி வருந்துகிறாள். அப்போது விண்ணில் பிரகாசமான ஒளி தோன்ற அவ்வொளிக்கிடையே தேவர்களுடன் தோன்றிய கோவலன் கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்து அழைத்துச் சென்றதால் மங்கலதேவி என்ற பெயர் பெற்றாள்.


 இதைக் கண்டு வியப்படைந்த குன்றத்துக் குறவர்கள் முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சேரநாட்டின் மன்னன் செங்குட்டுவனிடம் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் கூறினர். இதை விசாரித்து அறிந்த மன்னன் சேரன் செங்குட்டுவன் அந்த இடத்தில் கண்ணகிக்கு கோயில் ஒன்றைக் கட்டினான். இந்த கண்ணகி கோயில் அமைந்துள்ள பகுதி மங்கலதேவி கண்ணகி கோட்டம் என்று அழைக்கப்படுகிறது. 


2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த கோவில் ,இங்கு சென்று வந்ததை இந்த பதிவில் எழுதுகிறேன் .

என்னுடைய பயணம் சித்திரை முழுநிலவு நாளுக்கு முன்தினம் தொடங்கியது . சித்திரை முழுநிலவுக்கு முதல் நாள் மதியம் 2மணியளவில் கம்பம் நகருக்கு வந்தடைந்தேன் . அங்கு ஜாபர் இன்டர்நேஷனல் ஹோடேலில் அறை பதிவு செய்திருந்தேன் . கம்பம் நகரில் உள்ளபடியே சிறந்த தங்கும் விடுதி. விடுதி வந்தடைந்தவுடன் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு சுருளி அருவிக்கு சென்றோம் நானும் என் நண்பரும் . சுருளி அருவி கம்பம் நகரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது . ஒரு மணிக்கு ஒரு முறை மினி பஸ் கம்பம் பேருந்து நிலையத்திற்கு சிறிது தூரத்தில் இருந்து புறப்படுகிறது . பேருந்து நிலையம் சென்று ஏமாற வேண்டாம் . யாரிடமாவது விசாரித்து பஸ் புறப்படும் இடத்தை அடையலாம். 


அங்கிருந்து சுருளி அருவி க்கு சென்றால் அருவிக்கு அரை கிலோமீட்டர் முன்பே நமது வாகனங்களை நிறுத்திவிடவேண்டும் . பின்பு வனத்துறை சாலை வழியாக அருவிக்கு செல்ல வேண்டும்.வாகனங்கள் நிறுத்தும் இடம் அருகில் சிறிய கடைகள் இருக்கின்றன தேவையான சோப்பு ,ஷாம்பூ ஆகியவற்றை இங்கு வாங்கிகொள்ளலாம். இங்கு இளநீர் , கொய்யாபழம் போன்றவைகளும் கிடைகின்றன. சுருளி அருவியில் நாங்கள் சென்றிருந்த நேரத்தில் மிக சிறிதளவு தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது .இருந்தாலும் குளிப்பதற்கு போதுமானதாகவே இருந்தது .


 



சுருளி அருவியில் கவனிக்கப்பட வேண்டியவை .
 # ஆண்களுக்கு தனி இடம் மற்றும் பெண்களுக்கு தனி இடம் குளிப்பதற்கு இட வசதி உள்ளது .உடை மாற்றும் அறை பெண்களுக்கு தனியாக உள்ளது.அறைக்கு போகும் பாதை முழுவதும் ஈரமாக இருக்கும் என்பதால் கவனமாக நடக்க வேண்டும்.

 # இந்த மாதிரி ஏகாந்தமாக இருக்கும் அருவியை கண்டவுடன் இளைஞர்களுக்கு ஆர்வம் ஏற்படுவது என்பது இயல்பு என்றாலும் , இயற்கைக்கு முன்பு மனிதசக்தி ஈடு கொடுக்க ஒன்றுமே இல்லை என்பதை அறிந்து அருவிக்கு செல்வது ,முறையான இடத்தில குளித்து வருவது மட்டுமே உன்னதமான அனுபவத்தை கொடுக்கும்.


 # அருவிக்கு மேலே செல்லுவது போன்ற அபாயகரமான செயல்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் . காலம் காலமாக நீர் ஓடி ஓடி வழுக்கும் பாறையாக அனைத்தும் மாறி இருக்கிறது . எனவே முறையற்ற செயல்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.குழுவாக செல்பவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது இது. பொது மக்கள் செல்லும் இடங்களுக்கு மட்டுமே செல்லுங்கள்.குழுவின் உறுப்பினர்கள் எவராவது வீர தீர செயல்களில் இறங்கும் நடவடிகையை கண்டால் கண்டிப்புடன் அதை தவிர்க்கசொல்லுங்கள் , இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த காரணம் இது போன்ற அருவிகளில் நடக்கும் மரணங்கள் மட்டுமே. அப்படி ஒரு மரணத்தை கண்டதால் தான் இந்த அறிவுரை.


தயவு செய்து இன்ப சுற்றுலா செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர வேறு எங்கும் சென்று தங்களது ஆர்வத்தை காட்டுவதுஎன்பது சிறிது கவனம் பிசகினாலும் உங்களுடன் வந்திருக்கும் அனைவருக்கும் தீராத மனக்கவலையை தரும் .எனவே எச்சரிக்கை .


#வனத்துறை சோதனைசாவடியில் இருந்து அருவிக்கு போகும் பாதையில் நிறைய குரங்குகள் இருக்கின்றன . உணவு பொட்டலங்களை பாதுகாப்பாக எடுத்து செல்லவும். 

# சுருளிப்பட்டியில் இருபுறமும் திராட்சை தோட்டங்கள் உள்ளன .சில தோட்டங்களில் அங்கேயே திராட்சை விற்பனை நடைபெறுகிறது. தோட்டங்களில் வாங்குவதால் விலை கொஞ்சம் குறைவு.

  
 சுருளி அருவியில் இருந்து அறைக்கு திரும்பி சிறிது ஓய்விற்கு பின் அருகில் இருந்த கம்பராயர் பெருமாள் கோவிலுக்கு சென்றோம்.கம்பம் செல்பவர்கள் தவறவிடகூடாத கோவில் இது . இந்த கோவிலால்தான் கம்பம் என்ற பெயரே வந்ததாக வரலாறு. கோவிலுக்கு சென்று வந்தபின் இரவு உணவுக்கு அருகில் இருந்த உணவு விடுதிக்கு சென்றோம். ஹோட்டலில் உணவு வசதிகள் உண்டு , அறைக்கே வந்து தருகிறார்கள் . இருந்தாலும் கம்பம் நகரின் உணவின் சுவையை அறிய வெளியில் சென்றோம், நிறைய உணவு விடுதிகள் அருகிலயே இருக்கின்றன. நாங்கள் சென்ற உணவு விடுதி மிக சிறியது விறகு அடுப்பில் இட்லி சூடாக கிடைத்தது , அயிரை மீன் குழம்பு தனியாக விற்கிறார்கள். மிக அருமையான சுவையில் இருந்தது.

பின் அறைக்கு திரும்பினோம். சித்திரை முழுநிலவு நாளில் மட்டுமே தரிசிக்க அனுமதி உள்ள கண்ணகி தெய்வத்தை பார்க்கும் ஆவல் எழுந்தது ,அதிகாலை 4 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு விடுதியின் முன் நெடுஞ்சாலையில் நின்றிருந்தோம் .கம்பம் நகரில் இருந்து நிறைய ஜீப்புகள் செல்கின்றது. சிறந்த ஏற்பாடுகளை கம்பம் நகரின் கண்ணகி கோயில் வழிபட்டு குழுவினர் செய்திருந்தனர் . புதிதாக செல்பவர்கள் கம்பம் நகரிலேயே ஜீப் மூலமாக செல்வது மிக வசதியானது . குமுளி சென்றால் வாகன ஏற்பாட்டுக்கு மிகுந்த நேரம் ஆகும் . கம்பம் நகரிலேயே ஜீப்பில் செல்வது புத்திசாலித்தனம் . 

 சில குறிப்புகள் :-

 # கண்ணகி கோவில் ஒரு ஆண்டில் சித்திரை முழுநிலவு நாளுக்கு மட்டுமே பொதுமக்கள் வழிபட அனுமதி.ஏன் என்றால் பாதுகாக்கபட்ட வனத்தில் அமைந்துள்ளது. 

#தமிழகத்திற்கு சொந்தமான கோவில் இது, ஆனால் சாலை வசதி குமுளி ,கேரளா வழியாக மட்டுமே வாகனம் செல்லும் சாலை உள்ளது. 


#தமிழகத்திற்கு சொந்தமான கோவிலை அதன் உரிமையை கேரளா சமீப காலமாக மறுத்து வருகிறது .கோவிலின் பட்டா இந்த கோவில் தமிழகத்தில் உள்ளதை காட்டுகிறது. 


#கோவிலில் தமிழ் கல்வெட்டுகளை துணி கொண்டு கேரளா வனத்துறை மூடி மூடி வைத்துள்ளதை கவனித்தோம், இதை வருடம் வருடம் வந்து கொண்டிருக்கும் கம்பத்தை சேர்ந்த சிலர் எங்களுக்கு அந்த கல்வெட்டுகளை காட்டினார்கள்.

 #தமிழகத்தின் கற்பு தெய்வமான கண்ணகியை கேரள அரசு மங்கல தேவி என்று மட்டுமே பெயர் மாற்றம் செய்து அழைகிறார்கள் . தமிழகத்தின் வரலாற்றை சிறிது சிறிதாக மாற்றும் முயற்சி .இதை கம்பம் கண்ணகி வழிபாட்டு குழுவினர் முறியடிக்க முயற்சி எடுத்து வழிபாட்டிற்கு நிறைய தமிழர்களை திரட்ட பெரு முயற்சி எடுத்துக்கொண்டு இருகின்றனர் . அவர்களின் முயற்சி கண்டிப்பாக பாராட்ட பட வேண்டிய ஒன்றாகும் .


பகுதி இரண்டில் சித்திரை முழுநிலவின் பகல் பொழுதில் சென்ற பயணத்தை தொடர்கிறேன் ....உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன்... 


No comments:

Post a Comment